தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கான கோடைக்காலப் பயிற்சிப் பட்டறை

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில்  ‘மொழிப்பயிற்சியும் அகராதியும்’ என்னும் பொருளில் ஆசிரியர்களுக்கான கோடைக்காலப் பயிற்சிப் பட்டறை  இரண்டு நாட்கள் நடைபெற்றது. 

முதல் நாளான  தொடக்கவிழாவில் அகராதியியல் துறை இணைப்பேராசிரியர் சி.வீரமணி வரவேற்றார்.  துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன்  தலைமை ஏற்றி துவக்கி வைத்து பேசியதாவது : நவீன மொழிப்பயன்பாட்டுச் சிந்தனைகளுக்கு அகராதியின் பங்களிப்பு முக்கியமானது என்றார்.

பிழைகளற்ற தமிழ்ப்பயன்பாட்டினை மாணவர்கள் மத்தியில் கொண்டுசெல்ல ஆசிரியர்களின் மொழிப்பயன்பாட்டுச் சிந்தனையில் மாற்றங்கள் தேவை. அதனை மையமிட்டு இந்தப் பயிற்சிப் பட்டறை நடத்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்.  

பதிவாளர் முனைவர் சி.தியாகரஜன், வளர்தமிழ்ப்புல முதன்மையர் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன்  ஆகியோர் வாழ்த்துரையாற்றினார். தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் கு.வே.பாலசுப்ரமணியன்  சிறப்புரை ஆற்றினார்.   

முதலாம் அமர்வில் ‘அகராதி வளர் நிலைகள்’ என்னும் தலைப்பில் முனைவர் கு.வே.பாலசுப்பிரமணியன் அவர்கள் பயிற்சி வழங்கினார். இரண்டாம் அமர்வில் உமாமகேஸ்வரனார் கரந்தைக்கல்லூரியின் முன்னாள் இணைப்பேராசிரியர் முனைவர் அரங்க.சுப்பையா அவர்கள் ‘வல்லெழுத்து மிகும்-மிகா இடங்கள்’ குறித்துப் பேசினார்.

மூன்றாம் அமர்வில்  தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்காப்பியர் இருக்கையின் தகைசால் பேராசிரியர் ச.திருஞானசம்பந்தம் அவர்கள் ‘ஒருமை பன்மை மயக்கம்’ என்னும் தலைப்பில் பயிற்சி வழங்கினார்.

செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாள் நிகழ்வில் அமர்வுகள் தொடர்ந்து நடைபெற்றன. அமர்வு நான்கில் திருச்சி தூய வளனார் கல்லூரித் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் இ.சூசை ‘மொழிப்பயன்பாடும் அகராதியியலும்’ என்னும் பொருளில் பயிற்சி வழங்கினார்.

அமர்வு ஐந்தில் ‘மயங்கொலிப் பிழைகள்’  என்னும் தலைப்பில் அரசர் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் முனைவர் கி.மணிமாறன் அவர்கள் பேசினார்.

இறுதி அமர்வில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் பதிவாளர் முனைவர் முகிலை இராசபாண்டியன் அவர்கள் ‘சொற்பிழை தவிர்த்தல்’ என்னும் பொருளில் பயிற்சி வழங்கினார். செவ்வாய் அன்று பிற்பகல் நடந்த நிறைவுவிழாவில் கலந்துகொண்ட பதிவாளர் முனைவர் சி.தியாகரஜன் அவர்கள் பயிற்சிபெற்ற ஆசிரியர்களுக்குச் சான்றிதழ் வழங்கி உரையாற்றினார்.

இப்பயிற்சிப் பட்டறையின் ஒருங்கிணைப்பாளரும் அகராதியியல் துறையின் தலைவருமான முனைவர் செ.த.ஜாக்குலின் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.  தமிழகத்தின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இருந்து அறுபத்து மூன்று ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *