பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் தலைமை தபால் நிலையம் எதிரில் குணசேகரன் என்பவர் விஜயா மெட்டல் எனும் வீட்டு உபயோக பொருட்கள் கடை நடத்தி வருகிறார்.
இக் கடைக்கான குடோன் அருகில் அப்துல் சலாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தின் மாடியில் இயங்கி வருகிறது.
குடோனிற்கு அருகில் உள்ள பாம்பே புட் வேர் என்னும் காலணி கடைக்கு புதிய ஏசி பொருத்தும் பணி மாடியில் நடைபெற்று வந்துள்ளது. அப்போது வெல்டிங் வைத்தபோது அதிலிருந்து தீப்பொறி கம்பியானது குடோனில் எதிர்பாரத விதமாக விழுந்ததாக கூறப்படுகிறது
இதனையடுத்து குடோனில் இருந்து புகை வெளியேறுவதை உணர்ந்த பணியாளர்கள் ஓடி வந்து காலணி கடை உரிமையாளரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து விஜயா மெட்டல் உரிமையாளரிடம் நடந்ததை கூறி குடோன் சாவியை கேட்டுள்ளனர். குடோனை திறக்க சென்ற போது தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது
இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
குடோனில் ஆட்கள் யாரும் இல்லாததாலும், தீ விபத்து ஏற்பட்ட உடனே மின் ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தியதால் எவ்வித பெரிய பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடோனில் இருந்த சோபா,ஏசி, மெத்தை உள்ளிட்ட சுமார் 3 லட்சத்திற்கும் மேலான வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.