தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் செல்ல.ராசாமணி நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்பொழுது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளி விற்பனை செய்ததில் பெருமளவு முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்தது.
இதனை அடுத்து மணல் குவாரிகள் படிப்படியாக மூடப்பட்டன. கடந்த 7 மாதங்களாக மணல் குவாரிகள் செயல்படாததால் தமிழகத்தில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் காரணமாக தரமற்ற எம்.சாண்டை பயன்படுத்த வேண்டிய நிலையில் அதன் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், எனவே கட்டுமான பணிகள் பாதிப்படையாமல் இருக்க தமிழக அரசு உடனடியாக மணல் குவாரிகளை திறக்க வேண்டும், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் சுங்க சாவடிகளில் கட்டண உயரும் நிலையில் அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,
அதே சமயம் காலாவதியான சுங்க சாவடிகளை உடனடியாக மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 4-ம் தேதி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் சார்பில் நாமக்கல் ராசாம்பாளையத்தில் உள்ள சுங்க சாவடியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.