அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள கெங்கமுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவிநாயகர்,ஸ்ரீ முத்தாலம்மன், திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கள இசை முழங்க கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அதனை தொடர்ந்து முதல் கால யாக வேள்வி ஆரம்பமாகி மகா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டு கால யாகபூஜையுடன் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வளம் வந்து பின் வானத்தில் கருடன் வட்டமிட கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவில் கருவறையில் அமைந்துள்ள முத்தாலம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை மலர்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.