ராஜபாளையம் அடுத்த
முகவூர் சொக்கநாதன்புத்தூர் மெயின் ரோட்டில் தரைப்பாலம் துண்டிப்பால் மக்கள் தேசிய நெடுஞ்சாலை வழியே 15 கி.மீ சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. தற்காலிக பாதை ஏற்படுத்த மக்கள் கோரிக்கை எதிரத்துள்ளனர்.
முகவூர் சொக்கநாதன்புத்தூர் மெயின் ரோட்டில் நீர் வழி ஓடை தரைப்பாலம் உள்ளது. மழை நேரத்தில் வாகனங்கள் கடக்கும் ஆபத்து கருதி புதிய மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் பெய்த மழையால் சாஸ்தா கோயில் அணை பெருகி தண்ணீர் திறப்பால் முகவூர் கண்மாய் பாதுகாப்பு கருதி அனைத்து ஷட்டர்களும் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேம்பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் முகவூர், செட்டியார்பட்டி, சொக்கநாதன் புத்தூர், மேலூர் துரைச்சாமிபுரம், இரண்டு பக்கமுள்ள நூற்றுக்கும் அதிகமான பாசன விவசாயிகள் கடந்து செல்ல முடியாமல் தென்காசி தேசிய நெடுஞ்சாலை வழியே 15 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் தற்காலிக பாதைக்கு தாமதிக்காமல் சரி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.