சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை-12 ஆயிரம் குடும்பங்கள் வேதனை:
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் அறிக்கை :
கவர்னர் உரையுடன் தொடங்கிய இந்த சட்டசபை கூட்ட தொடரில் முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
சட்டசபையிலும் அதிமுக மதிமுக பாமக தவாக கொமதேக இந்த கோரிக்கையை வலியுறுத்தியது.
காங்கிரஸ், எஸ்டிபிஐ, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பாமக, அமமுக, தமாகா ஆகிய கட்சிகள் பகுதிநேர ஆசிரியர்களுக்கு இந்த முறையாவது பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் எனவும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியது.
எனவே முதல்வரின் பதில் உரையில் இனிப்பான அறிவிப்பை வெளியிடுவார் என பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்த்தோம்.
ஆனால் ஏமாற்றம் ஆகிவிட்டது.
10 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்ற பகுதிநேர ஆசிரியர்களை திமுக ஆட்சிக்கு வந்தால் பணிநிரந்தரம் செய்வதாக சொன்ன முதல்வர் இதுவரை செய்யவில்லை.
2,500 ரூபாய் சம்பள உயர்வு மட்டுமே கடந்த 2024 ஆம் ஆண்டு வழங்கப்பட்டதால், அதுமுதல் 12,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
இன்றைய விலைவாசியில் இந்த 12,500 சம்பளத்தை வைத்து கொண்டு குடும்பத்தை நடத்த முடியவில்லை.
இதிலும் மே மாதம் சம்பளம், பொங்கல் போனஸ், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, இறந்தவர் குடும்பத்திற்கு நல நிதி உள்பட எதுவுமே இல்லை.
13 ஆண்டுகளாக பணிநிரந்தரம் செய்யப்படாத நிலையில், வாழ்வாதாரம் மிகவும் பாதித்த நிலையில் பரிதவித்து நிற்கிறோம்.
தொகுப்பூதியம் ஒழிக்கப்பட்டு, காலமுறை சம்பளம் வழங்கப்பட்டால் மட்டுமே, எஞ்சிய காலத்தை நல்லபடியாக வாழ முடியும்.
உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன் பாடங்களில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரியும் 12 ஆயிரம் பேர் குடும்ப நலனையும், மாணவர்கள் கல்வி நலனையும் கருத்தில் கொண்டு, இந்த வேலையை முறைப்படுத்தி நிரந்தரம் செய்து முதல்வர் ஆணையிட வேண்டும்.
பணிநிரந்தரம் அரசாணையை முதல்வரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்துள்ளோம்.
—
S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
செல் : 9487257203