பெரம்பலூர் கழகத் தலைவர், முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்களின் அறிவுரைக்கு ஏற்ப, பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் நீர்,மோர் பந்தல் அமைத்து பொது மக்களுக்கு உதவிட பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொளுத்தும் கோடை வெயிலில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் ஆங்காங்கே நீர், மோர் பந்தல்கள் அமைத்திட கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகள், வார்டுகள்,
ஊராட்சி ஒன்றியங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிறுத்தங்களில் நீர்,மோர் பந்தல் அமைத்து பொது மக்களின் தாகத்தை தீர்ப்பதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும்.
இது தொடர்பான பணிகளை சம்பந்தப்பட்ட நகர,ஒன்றிய பேரூர், கிளை மற்றும் வார்டு கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னணியினர் இணைந்து செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.