வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்திற்கு எதிராக உள்ள பொது சுகாதார வளாகத்தில் தினசரி தேவையான தண்ணீர் வசதியுடன் தூய்மை பணியை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகாமாரியம்மன் ஆலயம் உள்ளது. ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக ஆலயத்திற்கு எதிராக வலங்கைமான் பேரூராட்சியின் சார்பில் பொது சுகாதார வளாகம் உள்ளது. இந்த பொது சுகாதார வளாகம் பழுதடைந்த நிலையில் பல மாதங்களாக பூட்டியே கிடந்தது. மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி மாதத்தில் புகழ் பெற்ற பாடைக் காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதனையொட்டி வலங்கைமான் பேரூராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டம் 2.0, 2024-2025 இன் மூலம் ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று கடந்த மார்ச் மாதம் திருவிழாவிற்கு முன்பாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
பயன்பாட்டிற்கு வந்து ஒரு மாத காலத்திலேயே போதுமான தண்ணீர் வசதி, தினசரி சரியான தூய்மை பணிகள் நடைபெறாத நிலையில் சுகாதார வளாகத்தை பக்தர்கள்,பொது மக்கள் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து பொது சுகாதார வளாகத்தை பக்தர்கள், பொது மக்கள் பயன்படுத்த ஏற்ற வகையில் சீரமைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.