திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான் – நீடாமங்கலம் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் புதன்கிழமை தேசிய வேளாண் மின்னணு சந்தை மூலம் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த வாரம் ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் கண்ணன் உத்திரவின் பேரில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.
பருத்தி ஏலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தியினை கொண்டு வந்தனர். சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8 வியாபாரிகள் கலந்து கொண்டனர். பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் 7 ஆயிரத்து 699 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக ரூபாய் 6 ஆயிரத்து 199 ரூபாய்க்கும், சராசரி விலையாக குவிண்டால் ரூபாய் 6 ஆயிரத்து 975 க்கும் ஏலம் போனது. இந்த வாரம் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் 587.36 குவிண்டால் பருத்தி ரூ.41 லட்சத்து 11 ஆயிரத்து 938 ரூபாய்க்கு ஏலம் போனது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகள் தங்களது பருத்தியினை நன்கு உலர்த்தி கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சரியான எடை மற்றும் நல்ல விலையில் பருத்தியினை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து பயன் பெற ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் ரமேஷ் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.