திருச்சி திருவானைக்கோவில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் வரலாறு கூறும் நாணயங்கள் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் மருதவாணன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பெல்சியானா லூர்து மேரி, திருவானைக்காவல் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் விஸ்வேஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசரியர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர்,பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன், பாரத சாரணர், சாரணியர் இயக்க மணப்பாறை உதவி ஆணையர் இளம் வழுதி உள்ளிட்டோர் தனது சேகரிப்பினை காட்சிப்படுத்தி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு பழமையான காசுகள், பானை ஓடுகளை அடையாளம் காணவும், உலகப் பணத்தாள்கள் நாணயங்கள் பழங்கால பொருட்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் வட்ட சில்லுகள் குறித்து பேசுகையில், சுடுமண் மட்கலனின் உடைந்த ஓடுகள் கொண்டு வட்டமாக தட்டையான வடிவில் காணப்படுவது வட்டசில்லுகள் என்பர். வட்டச் சில்லுகள் பல அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. அவற்றில் சில அலங்காரம் செய்த நிலையிலும் கிடைத்துள்ளது. வட்டசில்லுகள் அக்கால மக்களின் சில்லு விளையாட்டு ஆகும் பெரும்பாலும் மகளிர் மட்டுமே விளையாட்டாக கருதி விளையாடியுள்ளனர்.

வட்டச் சில்லுகள் குறித்து தொல்லியல் நூல்கள் தகவல்களை வழங்குகின்றன எனவே மாணவர்கள் வரலாற்றை அறிந்து கொள்ள பல நூல்களை கற்றறிய வேண்டும் என்றார்.முன்னதாக தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் பிரேமலதா வரவேற்க, நிறைவாக சிவகாமி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *