காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
நியாய விலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: மாற்று ஊழியர்களை நியமித்து ரேஷன் பொருள்கள் வழங்க பாஜக கோரிக்கை.
காங்கயம், நியாய விலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், மாற்று ஊழியர்களை நியமித்து ரேஷன் பொருள்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட அரசுத் தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோ, காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
கடந்த சில நாள்களாக நியாய விலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், காங்கயம் வட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் ரேஷன் பொருள்கள் கிடைக்காத நிலை உள்ளது. இதன் காரணமாக வயதானவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்டோர் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, நியாயவிலைக் கடை ஊழியர்களுடன் முறையாக பேச்சுவார்த்தை நடத்தி கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, மாற்று ஊழியர்களை நியமித்து, ரேஷன் பொருள்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு கொடுக்கும்போது, பாஜக கட்சியின் அரசுத் தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் கே.நரேந்திரன், மத்திய அரசு நலத்திட்டப் பிரிவின் மாவட்ட செயலாளர் நந்தகுமார், பாஜக மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் துரைசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.