தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 476 மனுக்கள் பெறப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முதன்மை திட்டமான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரபெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆணையிட்டார்.
மேலும் வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, வனத்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த 476 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராசு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்தையா, ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்…