பாரூர் கிராமத்தில் ரூபாய் 4 கோடியே 50 லட்சம் மதிப்பில் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேபியா மீன்குஞ்சு வளர்ப்பு மையம் – கானொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாரூர் கிராமத்தில் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேபியா மீன்குஞ்சு வளர்ப்பு மையம் மற்றும் அலுவலக கட்டிடத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து 29.9.2023 இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சரயு மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வளமான உள்நாட்டு நீர் வளங்களை கொண்ட மாவட்டமாகும். தென்பெண்ணை ஆறு மற்றும மார்கண்டேயன் நதி ஆகிய இரு ஆறுகள் மாவட்டத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்கின்றன.
இந்த நீர் ஆதாரங்களை கொண்டு கிருஷ்ணகிரி அரசு மீன் விதைப்பண்ணை உருவாக்கப்பட்டு அதன் மூலம் திலேபியா மீன் விதை உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தமிழ்நாடு, கேரளா, மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டாலும், மீன் விதைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை.
அதனடிப்படையில் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு பாரூர் கிராமத்தில் தெண்பெண்ணை ஆற்றின் அருகே மரபணு மேம்படுத்தப்பட்ட திலேபியா மீன்குஞ்சு வளர்ப்பு மையம் ரூபாய் 4 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு இன்று திறப்பு விழா கண்டுள்ளது. இதன் மூலம் மீன் விதைகளின் உற்பத்தியை அதிகரிக்க முடியுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.