திருக்கோவலூர் அருகே மணலூர்பேட்டை சாலையில், சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில், சொரையப்பட்டு கிராமத்தில், விநாயகர் கோவில் அருகில் கற்பலகை ஒன்றில் முன்னும் பின்னும் 23, வரிகளில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
கபிலர் தொன்மை ஆய்வு மையத்தின் தலைவர், வரலாற்று ஆய்வாளர் சிங்கார உதியன் தலைமையில், கல்வெட்டு ஆய்வாளர்கள், விழுப்புரம் வீரராகவன், வரலாற்றுப் பேராசிரியர் ரா.ஸ்தனிஸ்லாஸ், நல்நூலகர் மு.அன்பழகன், மு.கலியபெருமாள், ஆகியோர் திருக்கோவலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிற பகுதிகளையும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பிற பகுதிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இக்கல்வெட்டு விஜய நகர அரசர்களுக்கே உரித்தான, ஸ்ரீ மன்மகா மண்டலேஸ்வரர் எனத் தொடங்கும் மங்கலச் சொற்றொடர்களுடன் கல்வெட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் மேல்பகுதியில் சூலமும் , அருகில் முத்திரைச்சின்னம் போன்ற ஒரு அமைப்பும் செதுக்கப்பட்டுள்ளது.
படைவீட்டு சாவடிக்கு உட்பட்ட வானகோப்பாடி நாட்டின் ஒரு பகுதியாக சுரபி பட்டு விளங்குகிறது இச் சுரபி பட்டு தற்போது மாற்றமடைந்து சொரையப்பட்டு என்று அழைக்கப்படுகிறது.
சக வருஷம் 1359-(கி.பி.1437) (சரியான தமிழ் வருடம், பிங்கல ஆண்டு, ஆவணி மாதம் 10 ஆம் தேதி) – இல் இப்பகுதியை பரிபாலனம் செய்த கஜவேட்டை பிரதாப தேவராய மகராயர் திருவண்ணாமலை யில் உள்ள சம்பந்தா நந்த ஆண்டாள் மடத்தை நிர்வகிப்பதற்காக சொரையபட்டு கிராமத்தில் வசூலிக்கப்பட்ட அனைத்து வரிகளையும் அவரால் கொடுக்கப்பட்டது.
இந்த ஊர் நான்கு எல்லைக்கு உட்பட்ட நஞ்சை, புஞ்சை மானாவாரி நிலத்தில் விளையக்கூடிய நெல் முதல் பொன் வரை எப்பேர்பட்ட வரிகளிலிருந்தும் வரக்கூடிய வருவாயை இம்மடத்தை நிர்வகிப்பதற்கு அளிக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார்.
இந்த செயல்பாடு சூரியன் சந்திரன் இருக்கும் வரையிலும், நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. தொல்லியல் துறையினர் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பதிவு செய்துள்ளனர்.
மேலும்,இவ்வூர் ஏரியில் குண்டுக்கல்லில் உரலோ, செக்கோ, பொதுவில் வைக்கப்பட்டு வந்துள்ளது.
இங்கு வைக்கப்பட்டுள்ள உரலின் பக்கப் பகுதியில் கல் எழுத்து இரண்டு வரிகளில் பொறிக்கப்பட்டது.
இக்கல்வெட்டானது,இவ் உரலை வெட்டி வைத்த “ஸ்ரீ தளிவன், பெறி நாராயணந்.”என்றுள்ளது உரலில் வெட்டப்பட்டுள்ள எழுத்தமைதியை கண்டு இதன் காலம் 7 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என அறியவருகிறது.
மேலும் அக்காலத்தில் , அரசு அனுமதியுடன், இவ்வாறான உரலோ, செக்கோ வைக்கும் வழக்கம் இருந்துள்ளது.