பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு அரசு அலுவலர், ஆசிரியர் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அனுமதி மற்றும் 21 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க வேண்டும்.

இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய குறைபாட்டினை சரி செய்ய வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, ஊர் புற நூலகர்கள், செவிலியர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் அரசு ஊழியர்களுக்க வேண்டும்.

இவைகள் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரெ.ஈவேரா தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் பா.ராஜசேகர், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ப.அலெக்சாண்டர், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலத் தலைவர் க.வாசுகி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைச் செயலாளர் சி.ஜூலியஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் இரா.முருகேசன், மாவட்டப் பொருளாளர் ஆ.சுபாஷ், தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர் சங்க மாவட்டத் தலைவர் டி.வன்னியநாதன், பேரூராட்சி பணியாளர் சங்க அமைப்பு செயலாளர் மோகன், தேசிய ஆசிரியர் சங்கம் மாவட்டச் செயலாளர் அசோக்குமார், தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்றோர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பெருமாள் உள்ளிட்டோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.

முன்னதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் வீ.ரெகுநாதன் வரவேற்றார். இறுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *