இந்திய ரயில்வே தற்போது அதிநவீனமான ஒன்றாக மாற தொடங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சீறி பாய்ந்து கொண்டுள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் (Vande Bharat Express Trains) இதற்கு ஒரு உதாரணம். ஆனாலும் இந்தியாவில் புல்லட் ரயில்கள் (Bullet Trains) இல்லை என்ற குறை, மக்கள் மத்தியில் இருக்கவே செய்கிறது.
இந்த குறை கூடிய விரைவில் நிவர்த்தியாக உள்ளது. ஆம், மும்பை-அகமதாபாத் (Mumbai-Ahmedabad) நகரங்களுக்கு இடையே இன்னும் ஒரு சில ஆண்டுகளில் புல்லட் ரயில் இயங்கவுள்ளது. இதுதான் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் ஆகும்.
ஆனால் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு, ஜப்பானைதான் (Japan) இந்தியா பெரிதும் நம்பியுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவி என 2 முக்கியமான விஷயங்களிலும், ஜப்பான்தான் இந்தியாவிற்கு உதவி செய்து கொண்டுள்ளது.
எனவே மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை முழுக்க முழுக்க இந்தியாவின் முயற்சி என கூற முடியாது.
ஆனால் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயிலை தொடர்ந்து, இந்திய மக்கள் அனைவரும் பெருமைப்படும் வகையில், முழுக்க முழுக்க இந்தியாவின் முயற்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புதிய புல்லட் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது இந்தியாவின் சொந்த புல்லட் ரயில்கள் ஆகும். இங்கே ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்தியாவின் சொந்த புல்லட் ரயில்களை உருவாக்குவதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன என்பதுதான்!
இந்திய ரயில்வே தற்போது இயக்கி கொண்டுள்ள
எந்தவொரு ரயிலை காட்டிலும், இந்த புதிய புல்லட் ரயில்கள் மிகவும் அதிவேகத்தில் பயணம் செய்யக்கூடியதாக இருக்கும். இந்தியாவின் இந்த புதிய புல்லட் ரயில்கள் மணிக்கு 250 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான வேகத்தில் பயணம் செய்யும் என இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்