திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி வகுப்பில் இன்று தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் தீவிபத்தும் தடுக்கும் வழிமுறைகளும் பற்றிய விழிப்புணர்வு செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார். ஓவிய ஆசிரியர் பெ. பார்த்திபன் வரவேற்றார். தீயணைப்புத்துறை உதவி அலுவலர் தட்சணாமூர்த்தி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலர் வ. வடிவேலு பங்கேற்று, தீவிபத்து ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டிய செயல்பாடுகள் குறித்து விளக்கினார். இதில் அடுப்பு எரியும் போது மண்ணெண்ணெய் நிரப்பக் கூடாது,
மின்சார பொருட்கள், மின் இணைப்புகள் குழந்தைகளுக்கு எட்டும் நிலையில் இருக்கக் கூடாது, குழந்தைகளை சமையலறையில் தனியாக விட்டு வெளியே செல்லக்கூடாது, தூங்குவதற்கு முன் அகல் விளக்கையும், அடுப்பையும் அணைத்து விட வேண்டும், ஆடைகளில் தீப்பற்றிக் கொண்டால் ஓடக்கூடாது, கம்பளி, கனமான போர்வை போன்றவைகளை போர்த்தி தரையில் உருட்ட வேண்டும் என்பன உள்பட பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும் தீத்தொண்டு வாரம் குறித்த துண்டு பிரசுரங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இறுதியில் ஆசிரியை சந்தியா நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.