எஸ்.செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழி
சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் பிரமோட்சவத்தின் எட்டாம் திருநாளாக இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான சட்டை நாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. திருநிலைநாயகி அம்பாள் உடனுறை பிரமமபுரீஸ்வரர், மலைக்கோயிலில் சட்டைநாதர், தோனியப்பர், அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் திருஞானசம்பந்த பெருமானுக்கு, உமையம்மை ஞானப்பால் வழங்கிய ஐதீக நிகழ்வு திருமுலைப்பால் பிரம்மோற்சவம் ஆக ஆண்டுதோறும் 15 நாள் திருவிழாவாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 14ஆம் தேதி இக்கோயிலில் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் முக்கிய நிகழ்வாக 2-ம் நாள் திருமுலைப்பால் விழா மற்றும் சகோபுரம், திருக்கல்யாணம் ஆகிய உற்சவங்கள் நடந்து முடிந்துள்ளது. இன்று எட்டாம் நாள் திருவிழாவாக திருத்தேரோட்டம் நடைபெற்றது.
முன்னதாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் விநாயகர் சுவாமி அம்மன் முருகர் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் திருஞானசம்பந்தரும் எழுந்தருளினார். சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது .
தொடர்ந்து கோயில் கட்டளை ஸ்ரீமத் சட்டநாதன் தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து திருத்தேரோட்டத்தை தொடங்கி வைத்தார் .தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேரினை இழுத்தனர். கீழவீதியில் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. வழியெங்கும் பக்தர்கள் சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டனர். இதில் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து தரிசனம் செய்தனர்