பருவம் தவறி பெய்த மழையால் பருத்திக்கு உரிய மகசூல் கிடைக்காத நிலையில், பருத்தி கொள்முதல் விலையை உயர்த்திட கோரி பருத்தி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி அறுவடைக்கு பிறகு கோடை சாகுபடி ஆக பெரிய அளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுவது வழக்கம். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 14,000 எக்டேரில் சம்பா மற்றும் தாளடி அறுவடைப் பணிகள் முடிவுற்ற நிலையில் ஆதிச்ச மங்கலம், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, மருவத்தூர், மேலவிடையல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்து 250 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சுமார் ஆயிரம் ஏக்கரில் கடந்த சில ஆண்டுகள் வரை பருத்தி சாகுபடி செய்து வந்த நிலையில் பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்தது. இதனால் பருத்தி சாகுபடி கடந்த ஆண்டு கூடுதலாக சுமார் 8, 250 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது.
வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக பருத்தி சாகுபடி பல இடங்களில் பெரிய அளவில் பாதிப்பினை அடைந்துள்ளது.
வலங்கைமான் பகுதியில் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட மொத்த பரப்பளவில் 20% மழையின் காரணமாக செடிகள் பாதிக்கப்பட்டதை அடுத்து தொடக்க நிலையிலே உழவு செய்யப்பட்டு நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இப்போது 30 சதவீத இடங்களில் பருத்தி செடிகள் போதிய வளர்ச்சி இன்றி காணப்பட்டது. விவசாயிகள் பருத்தி செடியின் வளர்ச்சியினை ஊக்கப்படுத்திடவும், களைகளை கட்டுப்படுத்திடவும், வழக்கத்தை விட 50 சதவீதம் கூடுதலாக செலவு செய்யும் நிலை ஏற்பட்டது.
கடந்த ஆண்டுக்கு முதல் ஆண்டு தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றிற்கு சராசரியாக ரூபாய் 12,200 வரை கொள்முதல் விலை கிடைத்தது. கடந்த ஆண்டு தொடர் மழையினால் பருத்தி பாதிப்பு மற்றும் விலை குறைவு போன்ற காரணங்களால் நடப்பு பருவத்தில் குறைந்த பரப்பளவில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
தற்போது பருத்தி மகசூல் துவங்கியுள்ள நிலையில் பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை. எனவே பருத்தி யின் கொள்முதல் விலையை நியாயமாக உயர்த்திட கோரி, பருத்தியை ஒன்றிய அரசு நேரடியாக இடைத்தரகர்கள் இல்லாமல் உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என பருத்தி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.