ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்று சொந்த ஊர் திரும்பிய மயிலாடுதுறை மாவட்ட குத்துச்சண்டை வீராங்கனைகள்.ஏழ்மை நிலையில் உள்ள தங்களுக்கு அரசு உதவி செய்தால் மேலும் பல பதக்கங்களை குவிப்போம் என நம்பிக்கை.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 4-வது யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 11-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, அரியானா, இமாச்சல் பிரதேஷ், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.

இதில், பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தமிழ்நாடு சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகள் கலந்துகொண்டனர்.

இவர்களில் மகேஷ், வைதேகி ஆகிய இரண்டு மாணவிகள் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றனர்.

மேலும், கார்த்திகா, ஹீமா ஆகிய இரண்டு மாணவிகள் இறுதிப்போட்டியில் வெற்றியை நூலிழையில் தவற விட்டு வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினர்.

வெற்றி பெற்று ரயில் மூலம் சொந்த ஊர் திரும்பிய மாணவிகளுக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில், தெரசா கல்லூரி செயலர் கர்ணா ஜோசப் பாத், கல்லூரி முதல்வர் காமராசன் ஆகியோர் தலைமையில் அனைத்துத்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர் திரண்டு, சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஏழ்மை நிலையில் உள்ள தங்களுக்கு அரசு கைகொடுத்து நிதி உதவி அளித்தால் தேசிய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் பல பதக்கங்களை குவிப்போம் என வெற்றி பெற்ற மாணவிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *