மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் படி ஊரகப் பகுதிகளில் உள்ள உடல் உழைப்பு தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும்.

இந்த வகையில் தமிழ்நாட்டில் 85 லட்சம் குடும்பங்கள் வேலை அட்டைகள் பெற்றுள்ளன.
இந்தக் கணக்கின் படி 85 கோடி மனித நாள் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் .
ஆனால் பாஜக ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு 20 கோடி மனித வேலை நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீட்டையும் குறைத்துள்ளது.

இந்நிலையில் கிராமப்புறத் தொழிலாளர்கள் வேலை உறுதியளிப்பு சட்டத்தின் படி 100 நாள் வேலை கொடுக்க வேண்டும் என நேற்று தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி நிர்வாகத்திடம் (தலைவர் / செயலாளர்) பெருந்திரள் முறையீடு செய்வது என்ற தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க மாநிலக் குழு முடிவின் படி, மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி ஒன்றியம் மற்றும் செல்லம்பட்டி ஒன்றியங்களில் இரும்பாடி , கருமாத்தூர் மற்றும் கருமாத்தூர் ஊராட்சி அலுவலகங்களில் வேலை வேண்டி விண்ணப்பம் செய்தனர்.

மதுரை மாவட்டத் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க(பி.கே.எம்.யூ) தலைவர் தோழர். ஜோதி ராமலிங்கம் தலைமையில் வாடிப்பட்டி ஒன்றியம் இரும்பாடி ஊராட்சியில் 150 ற்கும் மேற்பட்ட மாகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி யளிப்புத் திட்டத் தொழிலாளர்கள் வேலை கோரும் மனுக்களை கொடுத்தனர்.

அதனைப்போன்று மதுரை மாவட்ட விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் விருமாண்டி தலைமையில் செல்லம்பட்டி ஒன்றியம் கோவிலாங்குளம் ஊராட்சியில் 80 தொழிலாளர்களும் கருமாத்தூர் ஊராட்சியில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை கேட்டு விண்ணப்பம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *