திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான்- நீடாமங்கலம் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் வாரந்தோறும் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த வாரம் ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் மல்லிகா (பொ) உத்தரவின் பேரில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. பருத்தி ஏலத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்தனர்.
சேலம், ஈரோடு, கோயமுத்தூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 7 வியாபாரிகள் கலந்து கொண்டனர். பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் 7,249 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக 5,759 ரூபாய்க்கும், சராசரி விலையாக குவிண்டால் ரூபாய் 6,398 க்கும் ஏலம் போனது ஏலம் போனது. இந்த பருத்தி மறைமுக ஏலத்தில்1,096 குவிண்டால் பருத்தி 70 லட்சத்து 49 ஆயிரத்து 399 ரூபாய்க்கு ஏலம் போனது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகள் தங்களது பருத்தியை நன்கு உலர்த்தி கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சரியான எடை மற்றும் நல்ல விலையில் பருத்தியை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து பயன்பெற ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் வீராசாமி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.