தமிழ் நாடு கேட்டரர்ஸ் சங்கம் நடத்தும் பிரம்மாண்ட உணவு திருவிழா உணவு திருவிழா மற்றும் திருமண கண்காட்சியின் அறிவிப்பு நிகழ்ச்சி கோவை நவ இந்திய பகுதியில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இன்று (18.7.2024) மாலை நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் திரு. R. நாகராஜ், மாநில பொது செயலாளர் தயாளன், மாநில பொருளாளர் சதிஷ், மாநில செயலாளர்கள் செந்தில் முருகன், ரஞ்சித் குமார் மற்றும் ஹரிஹரன், சிறப்பு விருந்தினர்கள், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் M. கிருஷ்ணன், உணவு பாதுகாப்பு துறையின் கோவைக்கான நியமன அதிகாரி தமிழ் செல்வன், சபரிநாதன் அவர்கள் தலைவர் தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பு, சிவராம், தலைவர், வனம் இந்தியா அறக்கட்டளை, ராக் அமைப்பின் கவுரவ செயலர் ரவீந்திரன், அரோமா குழும தலைவர் பொன்னுசாமி, கோவை விழா 2024 தலைவர் அருண் இந்த அறிமுக விழாவில் கலந்து கொண்டனர்.

இதில் அந்த சங்கத்தின் தலைவர் திரு. R. நாகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் கோயம்பத்தூர் விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு கோவை விழாவுடன் இணைந்து தமிழ்நாடு கேட்டரர்ஸ் அசோசியேஷன் சார்பில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி (சனி), டிசம்பர் 1 ஆம் தேதி (ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கோவை கொடிசியா மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக இந்த உணவு திருவிழா மற்றும் திருமண கண்காட்சி கோயம்புத்தூர் விழா 2024 உடன் இணைந்து நடத்த உள்ளோம்.

முதல் முறையாக எங்கள் சங்கம் சார்பில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை நடத்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த உணவு திருவிழாவில், கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ் நாடு கேட்டரர்ஸ் சங்கம் கீழ் உள்ள 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உடன் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள சுமார் 600 கேட்டரிங் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என மொத்தம் சுமார் 1000 கேட்டரிங் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க பெரியவர்களுக்கு ரூ.800ம் சிறியவர்களுக்கு ரூ.500ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 300க்கும் அதிகமான தரமான, விதவிதமான, உணவு வகைகளை( சைவம்/ அசைவம்) உண்டும், பிரபல சூப்பர் சிங்கர்ஸ், நடன கலைஞர்கள், நகைச்சுவை கலைஞர்கள் நிகழ்ச்சிகளை பார்க்கவும் முடியும்.

உணவுகள் அனைத்தும் மிகப்பெரும் பூபெ (BUFFET) அமைப்பில் வைக்கப்பட்டிருக்கும். இதில் வெவ்வேறு சமையல் வகைகளின் கீழ் உள்ள உணவுகள் அனைத்தும் இடம்பெறும். மேலும் உடலுக்கு மிக ஆரோக்கியமான சிறு தானிய வகைகளில் செய்யப்படும் சுவை மிகுந்த உணவு வகைகளும் இந்த உணவு திருவிழாவில் இடம்பெறும். அத்துடன் இந்த நிகழ்வின் நுழைவு பகுதியில் 50 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, அதில் திருமண நகைகள், ஜவுளி வகைகள் காட்சிப்படுத்தியும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருக்கும்.

மைதானத்தில் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, ஒரு பிரிவில் அதிகபட்சம் 2000 பேர் உணவு உண்ணும் படி அமைப்புகள் மேற்கொள்ளப்படும். இந்த இரண்டு நாட்களில் மொத்தம் 20,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *