ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்,ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை வேளாண்மைத் துறை காவல் துறை. ஊரக வளார்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகங்கள். பேரூராட்சித்துறை, கூட்டுறவு துறை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், மின்சாரத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை. மருத்துவத் துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலை வாய்ப்பு மற்றும் பொதுநலன் என 298 மனுக்கள் வரப்பெற்றது.
மேற்கண்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மணு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் விருப்பக்கொடை நிதியிலிருந்து 12 பயனாளிகளுக்கு ரூ.70,000/- மதிப்பீட்டிலான தையல் இயந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக் கருவி, மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி உள்ளிட்ட ரூ.67 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியர் கீதா லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுகுமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.