இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உடையநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்களில் குடிநீர் வராததால் விலைக்கு வாங்கி மக்கள் பயன்படுத்துகின்றனர். உடையநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இங்கு பொதுமக்கள் விவசாயம், கூலி வேலை செய்து வருகின்றனர். இப்பகுதியில் போதுமான அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். கடந்தாண்டு உடையநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குழாய் அமைக்கப்பட்டது.

அதற்கு பிறகு ஒரு சில தினங்கள் மட்டுமே குழாயில் குடிநீர் வந்தது. தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குடிநீர் வராமல் நிறுத்தம் செய்யப்பட்டது. இதுகுறித்து மாற்றுத் திறனாளி பஞ்சவர்ணம் கூறியதாவது, குழாயில் ஒருசில நாட்கள் மட்டும் வரும் தண்ணீரை பிடிப்பதற்காக கிராம மக்கள் போட்டி போட்டு பிடித்து செல்கின்றனர்.

நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி சிரமப்படுகிறோம். எனவே அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *